Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோவா - யோவா 13

யோவா 13:11-29

Help us?
Click on verse(s) to share them!
11தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
12அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
13நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
14ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.
15நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
16உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல.
17நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
18உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
19அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
21இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
22அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
23அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
24யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
25அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
26இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார்.
27அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.
28அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை.
29யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

Read யோவா 13யோவா 13
Compare யோவா 13:11-29யோவா 13:11-29