Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - ஆகாய்

ஆகாய் 2

Help us?
Click on verse(s) to share them!
1ராஜாவாகிய தரியு அரசாண்ட ஏழாம் மாதம் இருபத்தொன்றாம் தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக, யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்:
2நீ செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், மக்களில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்:
3இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் தோன்றுகிறதல்லவா?
4ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா மக்களே, நீங்கள் திடன் கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
5நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைசெய்த வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.
6சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்திற்குள்ளே இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையச்செய்வேன்.
7சகல தேசங்களையும் அசையச்செய்வேன், சகல தேசங்களாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
8வெள்ளியும் பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
9முந்தின ஆலயத்தின் மகிமையைக்காட்டிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.
10தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்:
11ஒருவன் தன் ஆடையின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகும்போது தன் ஆடையின் தொங்கல், அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சைரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த உணவையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியர்களிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
12அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
13பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் மேலும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: தீட்டுப்படும் என்றார்கள்.
14அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த மக்களும் இந்த தேசத்தாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லா செயல்களும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.
15இப்போதும் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டதுமுதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
16அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.
17பிஞ்சுக்காய்களினாலும், விஷப்பனியினாலும், கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலைகளிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
18இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியாகிய இந்நாள்முதல் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

19களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சைச்செடியும், அத்திமரமும், மாதுளம்செடியும், ஒலிவமரமும் பழங்களைக் கொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
20இருபத்திநான்காம் தேதியாகிய அதே நாளிலே யெகோவாவுடைய வார்த்தை இரண்டாவதுமுறை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:
21நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையச்செய்து,
22இராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, தேசங்களுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
23சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.