3நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
4நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.
5அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன்.
6அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.
7நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
8அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
9அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
10அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார்.
11அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.
12அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,
13என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.
14அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.