Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சகரி

சகரி 13

Help us?
Click on verse(s) to share them!
1அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.
2அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பெயரும் தேசத்தில் இல்லாதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
3இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவனை நோக்கி: நீ யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறதினால் நீ உயிரோடிருக்கக்கூடாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.
4அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல்,
5நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.
6அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.
7பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன்.
8தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனிதர்கள் அழிக்கப்பட்டு இறந்துபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.
9அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.