Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - உபா

உபா 13

Help us?
Click on verse(s) to share them!
1“உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:
2நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாகச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,
3அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார்.
4நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
5அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு விதித்த வழியைவிட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.
6“உன் தாய்க்குப் பிறந்த உன்னுடைய சகோதரனாகிலும், உன்னுடைய மகனாகிலும், மகளாகிலும், உன் மனைவியாகிலும், உன் உயிரைப்போலிருக்கிற உன்னுடைய நண்பனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தெய்வங்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி,
7உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை துவங்கி மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களில், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத அந்நிய தெய்வங்களை வணங்கும்படி இரகசியமாக உன்னைத் தூண்டிவிட்டால்,
8நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,
9அவனைக் கொலை செய்துவிடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதலில் உன் கையும் பின்பு சகல மக்களின் கைகளும் அவன்மேல் இருப்பதாக.
10அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவாவை விட்டுவிலகும்படி அவன் உன்னை தூண்டியதால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறிவாயாக.
11இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.
12“உன் தேவனாகிய யெகோவா நீ குடியிருப்பதற்குக் கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் வீணர்களாகிய துன்மார்க்கர்கள் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
13நீங்கள் அறியாத வேறே தெய்வங்களை வணங்குவதற்குப் போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிமக்களைத் தூண்டினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
14நீ நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமும் என்று கண்டால்,
15அந்தப் பட்டணத்தின் குடிமக்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள அனைத்தையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்து,
16அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட அனைத்தையும் முழுவதுமாக அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல் என்றென்றைக்கும் மண்மேடாயிருக்கக்கடவது.
17சபிக்கப்பட்ட பொருட்களில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,
18யெகோவா தமது கோபத்தின் பயங்கரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைவு செய்து, உனக்கு மனமிரங்கி, அவர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி உன்னைப் பெருகச்செய்வார்.