Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங்

சங் 55

Help us?
Click on verse(s) to share them!
1தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.
2எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.
3அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
4என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; மரணபயம் என்மேல் விழுந்தது.
5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.
6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
8பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.
9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
10அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.
12என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
13எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.
14நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.
15மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது.
16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; யெகோவா என்னை காப்பாற்றுவார்.
17காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்; அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார்.
18திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

19ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)
20அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை நீட்டி தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான்.
21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவனுடைய இருதயமோ யுத்தம்; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.
22யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.
23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.