6இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே” என்று சொன்னார்கள்.
7அந்த மன்னா கொத்துமல்லி விதையளவும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.
8மக்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
9இரவிலே முகாமின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
10அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; யெகோவாவுக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது தீமையாக இருந்தது.
11அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: நீர் இந்த மக்கள் எல்லோருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரச்செய்தது ஏன்? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்காமல் போனது ஏன்?
12இவர்களுடைய முன்னோர்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திற்கு நீ இவர்களை பால்குடிக்கிற குழந்தையைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன்னுடைய மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடு சொல்லும்படி இந்த மக்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?
13இந்த மக்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
14இந்த மக்கள் எல்லோரையும் நான் ஒருவனாகத் தாங்கமுடியாது; எனக்கு இது மிஞ்சின பாரமாக இருக்கிறது.
15உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என்னுடைய உபத்திரவத்தை நான் காணாதபடி இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்” என்று வேண்டிக்கொண்டான்.
16அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேல் மக்களுக்கு மூப்பர்களும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடு வந்து நிற்கும்படிசெய்.