Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - வெளி

வெளி 6

Help us?
Click on verse(s) to share them!
1ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன்.
2நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
3அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன்.
4அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
5அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
6அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
7அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
8நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
9அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன்.
10அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.
11அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
12அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது.
13அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
14வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.
15பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,
16மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
17அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.