Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோவா - யோவா 8

யோவா 8:19-34

Help us?
Click on verse(s) to share them!
19அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
20தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.
22அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
23அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.
24ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.
25அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான்.
26உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார்.
27பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
28ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
29என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
30இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
31இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்;
32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
33அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
34இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Read யோவா 8யோவா 8
Compare யோவா 8:19-34யோவா 8:19-34