Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - மாற்கு

மாற்கு 11

Help us?
Click on verse(s) to share them!
1இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
2உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
3ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.
5அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள்.
6இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
7அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
8அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.
9முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;
10கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
11அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார்.
12அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
13அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.
14அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள்.
15அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து,
16ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
17என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
18அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.

19மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள்.
20அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.
21பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான்.
22இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள்.
23யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
25நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள்.
26நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.
27அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து:
28நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.
29இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
30யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
31அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
32எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி;
33இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.