1ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.
2தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான்.
4வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள்.
5துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள்.
6இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன்.
7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
9வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
10உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.
13தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.
14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
15ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான்.