8பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினால் அவைகளை உனக்கும் உன் மகன்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்.
9மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாக இருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லா உணவுபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் பரிசுத்தமாக இருக்கும்.
10பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைச் சாப்பிடவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாக இருப்பதாக.
11இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாக இருக்கும்; அவைகளை உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர பங்காகக் கொடுத்தேன்; உன்னுடைய வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லோரும் அவைகளைச் சாப்பிடலாம்.
12அவர்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய சிறந்த எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
13தங்களுடைய தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன்னுடைய வீட்டிலே சுத்தமாக இருப்பவர்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்.
14இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாக இருக்கும்.
15மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
16மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன்னுடைய மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.
17மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
18அசைவாட்டும் மார்புப்பகுதியைப்போலவும் வலது முன்னந்தொடையைப்போலவும் அவைகளின் இறைச்சியும் உன்னுடையதாகும்.