Text copied!
Bibles in Tamil

லூக் 19:18-40 in Tamil

Help us?

லூக் 19:18-40 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
19 அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22 அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே,
23 பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி;
24 அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.
26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
28 இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
32 அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள்.
33 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34 அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
35 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36 அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்.
37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு,
38 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.
39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.
40 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
லூக் 19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்