Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யாத்

யாத் 40

Help us?
Click on verse(s) to share them!
1யெகோவா மோசேயை நோக்கி:
2“நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய்.
3அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
4மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
5பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
6பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
7தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,
8சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
9அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும்.
10தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும்.
11தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து.
12பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து,
13ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து.
14அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
15அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
16யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
17இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது.
18மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

19வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
20பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
21பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
22பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து,
23அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
24பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
25யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
26பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
27அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
28பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
29தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
30அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
31அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
32யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
33பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.
34அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.
35மேகம் அதின்மேல் தங்கி, யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது.
36வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள்.

37மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள்.
38இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.