24தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது.
25அவரைக்குறித்து தாவீது: கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்;
26அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாக்கு களிகூர்ந்தது, என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;
27என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்;
28ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
29சகோதரர்களே, “கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது.
30அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால்,
31அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
32இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம்.
33அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார்.
34தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும்,
35நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
36ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான்.
37இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
38பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள்.
39வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;